பொருனை

பொருனை

சனி, 8 ஆகஸ்ட், 2015

சிவபிரதோஷம்

ஆடியும் நித்தம் ஓடியும்  ஆனந்த நண்பர் கூடியும்
தேடிய சிவனைப் பாடியும் தேகத்தில் திருநீர் பூசிய
கோடியி லொருவ னாகியும்  கொண்டாட்டம் போட்ட வாலிபம்
ஆடியே போன நாளிலும்  அச்சிவனை மறக்கி லேனடி !            (1)
                               
(வாய்பாடு: விளம், மா, விளம்   . காய், மா, விளம்)               
                                 
"சிதம்பரே சர்,சிவ  காமி"  சிரித்தருள் அழகிய கோவில் 
அதற்கரு கிலேகுளிர் தண்ணீர் அலைகிற கனடியன் கால்வாய் ,
இதற்கெலாம் எழிலினைக் கூட்டும்  இளம்பொதி கைதரும் காற்றில்
பதமென சிவபிர தோஷம்  பலரினை இணைக்கிற தென்பேன் !          (2)

(வாய்பாடு: விளம், விளம், மா, விளம், விளம், மா   )     
                                             (19.12.2014)

கண்களைத்  திறந்து வைத்து  கங்கையைச் சுமந்த ஈசன்
பண்களைப் படிக்கும் போது  பற்றினைக் கொள்வ தெல்லாம்
புண்ணென எண்ண வைக்கும் !  பொன்னொளி அண்ணல் மூன்று
கண்ணனைப் பற்றிக் கொண்டு  காலனை வெல்லச் சொல்லும் !     (3)

வாசனை போக வேண்டி   வார்சடை பித்தன் பாத
வாசனை கொள்ள வேண்டும் !  மாதினை இடத்தில் வைத்த
ஈசனைப் போற்றும் இந்த  நேசனை நிமிரச் செய்ய
யோசனை என்ன வேண்டும் ?  யோகனே "சிதம்ப ரேசா !"             (4)

(வாய்பாடு: கூவிளம், மா , மா, கூவிளம், மா , மா   )     
                             (02.01.2015)



உருஅரு ஒன்றாய் உள்ளோன்  ஒளிவழி நன்றாய் நாமும்
அருகிலே ஆழ்ந்து நெஞ்சுள்  அனுபவித் திருக்க வேண்டும் !
பெருஉரு நந்தி தேவன்  இசைக்கிற நாத வெள்ளம்
இருசிறு செவிக்குள் சென்று  இயல்புட னொலிக்கக் கேட்போம் ! (5)

சிறுசிறு தும்பைப் பூவை  சிவனையே எண்ணிக் கட்டி
நறுமணப் பூக்கள் சேர்த்து  நடப்பதுன் செயலே என்று
விருப்பமாய் பாதம் சேர்த்தால்  வினைகளை அறுப்பான் ஈசன் !
திருப்பமாய் வாழ்வ ருள்வான்  பிறைமதி "சிதம்ப ரேசன் ! "(6)

(அறுசீர்விருத்தம் வாய்பாடு: கருவிளம், மா , மா, கருவிளம், மா , மா   )                                           (18.01.2015)

அந்தநாள் எண்ணத்தில் ஆனந்தம்
  அத்தனின் கோவிலுக்குள் கல்யாணம் !
சிந்தனை செய்வோர்கள் எல்லோரும்
 சேர்ந்தொரு நல்லிசையில் "ருத்ரத்தை"
வந்தனை செய்தபடி செல்வார்கள் !
 வாக்குடன் உள்நினைவும் ஒன்றாக்கி
எந்தனை எம்குலத்தைக் காத்திடென 
  ஈசனை உள்ளத்துள் கேட்பார்கள் !.     (7)

காளையின் மேலவனே காட்சிதரக் ,
  கண்களோ கற்பூரம் ஒற்றிவர ,
தாளையென் கைகளுமே பற்றிவர ,
     தாயினைப் போன்றவன்தன் அன்பினிலே
ஆளைஎனைக் கண்டதிலே ஆர்ப்பரித்தான் !
     ஆசையில் வில்வத்தைக் கொண்டுவிட்டான் !
நாளையின் காலத்தை நானறியேன் !
      "நற்றுணை நமச்சிவாயம் நன்கறிவேன் !"            (8)

        (01.02.2015)
(அறுசீர் விருத்தம் வாய்பாடு: கூவிளம், காய், காய்,
 கூவிளம், காய், காய்)
  
     
நீலக் கழுத்து விடமும் , நீண்ட கொடிய அரவும் ,
வேல வனுக்கு விழியால் பிறப்பைத் தந்த உருவும் ,
ஆல மரத்து நிழலில் அமைதி யடையும் குருவும் ,
காலங் கடந்த சிவனே ! கருணைக் கடவு ளமுதே !

நினைத்த நொடியில் சுடராய் , நிறைந்த அருளின் மலராய் ,
அனைத்துக் கவலை துடைக்கும்  அழகி  உமையின் உயிரே !
முனைந்து வணங்க மறந்த  முதிரா குணத்தோ னிவனை
நினைந்து கரத்தி லணைத்து நிழலாய் இருக்கும் சிவனே!
                             (16.02.2015)
(அறுசீர் விருத்தம் வாய்பாடு: மா, மா, மா, மா, மா, மா, )

  
இருண்ட மனதில் ஒளியானாய் ; இயற்கை நியதிப் பொருளானாய் ;
உருண்டு புரண்டு அழுதாலும் உயிருள் குளிர்ந்த சுகமானாய் ;
சுருண்டு கிடக்கும் பாம்பினையே தொட்டு எழுப்பும் குருவானாய் ;
மருண்மா அகந்தை அழிந்திடவே மனதை ஒடுக்கும் சிவமானாய் !

சிறகை விரித்துப் பறக்கின்ற சிந்தை யதனில் கவியானாய் ;
பிறவி எடுத்த பயன்சொல்லி பிறருக் குதவும் கையானாய் ;
இறக்கும் வரைக்கும் எளியோனாய் இருந்து பழக வழியானாய் ;
மறக்கும் பொருளாய் அமையாமல் மதியை அணிந்த அரனானாய் !

                                   (03.03.2015)
(அறுசீர் விருத்தம் வாய்பாடு: மா, மா, காய் , மா, மா, காய் ,)

சின்னஞ் சிறிய வயதினிலே சிட்டாய்ப் பறந்து திரிகையிலே
என்னுள் இருந்து விழிகாட்டி  இருந்தாய் சிவனே வழிகாட்டி !
கன்னம் குழித்துச் சிரிக்கின்ற  கரும்புச் சுவையாம் சரவணனின்
சின்னம் நெருப்புச் சுவைவண்ணா ! சிறுவன் எனக்கருள் செய்நன்னா  !

உயரே பரந்த ஒலிவானம்  உதிரும் மொழியோ சிவநாமம்
பயனை நினைத்துப் பணியாத  பனிபோ லிருப்போ னுருவாகும் !
நயனம் இரண்டும் ஒளிவீச நடக்கும் வடிவில் குருவாகும் !
அயனும் அரியும் அறியாத அவனே அருமை அரனாகும் !
 
                                    (18.03.2015)             
(அறுசீர் விருத்தம் வாய்பாடு: மா, மா, காய் , மா, மா, காய் ,)

  
ஒருபூ எடுத்துநான் போடாமல் ஓடிய நாளாய் இருந்தேனே !
தெருவில் திரிகிற தீவட்டி , தேவடி ஈசன் மறந்தேனே !
பருவச் சிறுமையில் பாராமல் பாடிட வார்த்தை இழந்தேனே !
அருமை அருட்பெரும் ஆனந்தன் ஆடிட நெஞ்சம் மறுத்தேனே  !

கல்வி அறிவினைக் கைவிட்டு கயவனின் கையில் கிடந்தேனே !
பல்கிப் பெருகிய பொய்யினிலே பாடியே நாளைக் கழித்தேனே !
வில்வ இலையைக் கொள்ளாமல் வீணடிக் கலையைக் கொண்டேனே !
நல்ல சிவனிடம் கேட்கின்றேன் நாடிய நானாய்த் தெளிவாயே !

(அறுசீர் விருத்தம் வாய்பாடு: மா, விளம், காய் , விளம் ,மா, காய் ,)
                                (01.04.2015)             

யிரம்மாய் நாமங்கள் சொல்லி
வாய்மணக்கும் ஆன்மீக மல்லி !
       தூய்மையிலா  உள்ளுக்குள்   
       நாய்குரைக்கும் "லொள்ளுக்குள்"
சாய்ந்துவிடா தீயகுணம் வில்லி !        (1)

ருண்டுவரும் நாள்போயே போகும் 
இருண்டமனம் உந்தாளை ஏகும்
இனியவனே என்விழியே
இனியிவனுள் நீநுழையே
மருண்டமனம் ஆதிசிவ மாகும் !(2)

சுமையெனவே அகங்காரம் ஏற்றி
சுவையெனவே எண்ணவைத்தாய் மாற்றி !
நவநவமாம் சிவஒளியே !
திவலையிவன் ஒர்துளியே ! 
இவையெல்லாம் உன்னருளே போற்றி !  (3)

(குறும்பா:(  காய், காய், மா,
                காய், காய், மா,
                காய், காய்,
                காய், காய்
                காய், காய், மா )

                                (16.04.2015)


"சந்திரனைக் கொண்டாய் ! நீண்ட     சடையில் கங்கை வைத்தாய் !
 செந்தீயைக் கையில் கொண்டாய் !       நீலக் கழுத்தில் நாக
  சந்தனத்தைப் பூசி நின்றாய் !     சத்த உடுக்கை கூட
   தந்திரமாய்க் கையில் கூட்டித்       தாளங் கொட்டு கின்றாய் !              (4)
  புயலெனவே சுற்றி நித்தம்      புதிதாய் ஆடு கின்றாய் !
  முயலகனைக் கூடக் காலில்    முட்டிப் பிடித்தி ருப்பாய் !
   நயமுடனே பணிந்து நானும்        நடரா ஜநுனைக் கேட்பேன்
  "பயலிவனின் பாப மூட்டைப்       பந்தை எங்கு வைத்தாய்!"          (8)

(அறுசீர் விருத்தம் வாய்பாடு: காய்,மா,மா, மா, மா, மா )
                                              (01.05.2015)                           

மணிக்கணக்காய் கண்மூடி உன்னை மனதினிலே கண்முன்னால் காணத்
துணிவில்லை ; பொறுமையுமே இல்லை ; துளிகூட பக்தியுளம் பேணாப்
பிணியாளன் என்னும்பேர் பெற்றேன் ! பித்தனுனை எண்ணுவது மில்லை !
அணியணியாய் நற்கவியால் உன்னை அன்போடு போற்றுவது மில்லை !(4)

பெற்றோரைத் திட்டியவன் ; ஊரில் பெரியோர்ச்சொல் கேட்காமல் நித்தம்
நெற்றிநீரைப் பூசாமல் காலி நெற்றியாக வைத்தவனின் உள்ளம்
பற்றியவா ! பரமசிவா ! உன்னை பக்திசெயா மூடனுக்கும் ஞானம்
பற்றிடவே அருள்செய்தாய் ! அந்தப் பரந்தமனம் எனக்கில்லை ஈசா !        (8)
(அறுசீர் விருத்தம் வாய்பாடு: காய்,காய் ,மா, காய் ,காய், மா )
(15.05.2015)

கனியிலும் ,காயிலும் , காடு கடல்வெளி , வானிலும்,  மூடு
பனியிலும், கொட்டுற தாள பதமிடும் ஒலியிலும், பிச்சை
தனியனாய் கேட்கிற ஈசன்  தாளினைப் பற்றிய எந்தன்
இனியதோர் கவியிலும், வாழும்   இறைவனே ! தோழனே! வாழி  !  (4)

(அறுசீர் விருத்தம் வாய்பாடு: விளம், விளம்,மா, விளம், விளம், மா )
(30.05.2015)

வெள்ளிப் பனிஉருவில் வெள்ளீசா ! விரைந்து உருகிவர கங்கேசா !
அள்ளி வரமளிக்கும் அருளீசா !அமரர் தினம்போற்றும் யோகீசா !
புள்ளி மான்பிடித்த நடராசா ! பொதுவாம் சுடலைக்கு நீராசா !
வள்ளி மாமனெனும் கர்வேசா ! வளரும் அறநெறியே சர்வேசா !   (4)

          (அறுசீர் விருத்தம் அரையடி வாய்பாடு: மா, காய்,காய் )

                                                 (14.06.2015)

இரவா பகலா இறைவோய்நீ ! இரண்டு மான பொருளோநீ !
இரவாப் புகழின் எழிலோநீ  ! இருந்தும் இல்லா உருவோநீ !
அரவாய் அமுதாய் கலப்போநீ !  அழகுக் கவிதை  நெருப்போநீ !
வரவாய் எனக்குள் உறவோநீ ! வசவில் லாத துறவோநீ !           (4)

சுகமாய் வலியாய் இருந்தேநீ  சுழலும் விதியாய் வருவாய்நீ !
நகமும் சதையு மானாய்நீ !  நரனில் முக்தி மானாய்நீ 
அகமும் புறமும் ஒளிர்ந்தாய்நீ !  அசுர சுரனின் குணத்தில்நீ
நிகரே இல்லா பலவான்நீ !  சிவனே தமிழ்நற் கவியேநீ  !           (8)
(அறுசீர் விருத்தம் அரையடி வாய்பாடு: மா, மா, காய்)

                                     (29.06.2015)
 சித்திரம் வரையும் விரல்களெனின்
   சிவனே உன்னைநான் வரைந்திருப்பேன் !
முத்திரை அறிந்த முனிகளெனின்
   மௌன மின்னலாய் ஒளிர்ந்திருப்பேன்  !
நித்திரை வேளை நினைத்திருந்தால்
  நீண்ட வேதனை அழித்திருப்பேன்  !
எத்திரை போட்டு மூடியதோ
  இறைவா என்மனம் திறப்பதில்லை !(4)

நந்தியைப் போலே நானிருந்தால்
  நன்றாய் உன்னிரு தாள்பிடிப்பேன் !
சிந்திய வார்த்தை இசையானால்
  சிறந்த கவியென சேவிப்பேன் !
அந்தியில் வானச் சிவப்பானால்
  அழகு நெற்றியில் கண்ணாவேன் !
எந்திர வாழ்வில் ஓடுவதால்
   ஈசன் பொன்னடி அறிவதில்லை !           (8)
((அறுசீர் விருத்தம் : மா, விளம், காய், மா, விளம், காய்)
                    (13.07.2015)

முத்தான இளமையிலே பக்தி
  முற்றாமல் இளமையிலைத் தேடி
சத்தான பொழுதுகளைக் காதற்
  சந்தையிலே கழித்தேனே பாவி!
பித்தாகத் திரிந்தவனைக் கூட்டி
 பிள்ளையெனச் சேர்த்தகுரு பாதம்
பித்தாக ஆனேன்வாய் பொத்தி
 பேச்செல்லாம் சிவநாம சக்தி !
((அறுசீர் விருத்தம் : காய்,காய்,மா, காய்,காய்,மா )

                        (29.07.2015)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக